Showing posts with label நன்னூல். Show all posts
Showing posts with label நன்னூல். Show all posts

Tuesday, 1 December 2015

22. பரிபாடல் -12 படிப்பும் பயனும்




22. பரிபாடல் -12



படிப்பும் பயனும்

இப்போதெல்லாம் படிப்பறிவு பெருகிவிட்டது.ஆனால்,பொதுவாக  பொழுதுபோக்கிற்காகவே படிக்கிறார்கள். அதற்கேற்றபடி, பல்சுவைப் பத்திரிகைகள்  பெருகிவிட்டன. அவற்றில் பெரும்பாலும் சாரமற்ற விஷயங்களையே சுவைபட எழுதுகிறார்கள்! பெரிய விஷயங்கள்கூட எளிமை என்ற  பெயரில் கருத்தாழமில்லாமல்  வருகின்றன. சினிமா,அரசியல், கதைகள்- இவைதான் பத்திரிகைகளின்  ஜீவனாடி! ஆன்மீகம்- சமயம் என்ற பெயரில் வருவதும் முக்காலும் ஜோசியம் பற்றித்தான்! திருப்புகழை விளக்குவதற்காகவே  வாரியார் ஸ்வாமிகள்  'திருப்புகழமிர்தம்' என்ற பத்திரிகை  35 வருஷங்களுக்கு மேல்  நடத்தினார்,. இன்று இது  நடக்குமா? நமது முன்னணிப் பத்திரிகைகளுக்கு கம்பராமாயணத்தைத் தொடர்ந்து வெளியிடும்  தைரியம் உண்டா?

படிப்பதற்குப் பயன் இருக்கவேண்டும் என்பது தமிழ் நூல் மரபு." அறம் பொருள் இன்பம் வீடடைதல் நூற் பயனே " என்பது  நன்னூல் சூத்திரம். பொதுவாக அகத்துறையில் இன்பத்தைப் பற்றியும்,புறத்துறையில்  மற்ற மூன்றையும் பற்றி வரும். பரிபாடல் என்ற வகையில், இன்பமும் பொருளும் கலந்து வருமென்பார்கள். இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் பரிபாடலில், திருமால், முருகன் பற்றிய.பாடல்கள் வருகின்றன. முருகன் பற்றிய  பாடல்களில் பிற சமாசாரங்களும் வரும்! நாம் இங்கு முருகனைப் பற்றிய விஷயங்களையே பார்த்து வருகிறோம்.இப்போது பார்க்கும் பாடலைப் பாடியவர்  குன்றம் பூதனார் என்ற புலவர்.


இமயத்தை நிகர்த்த பரங்கிரி


போர் எதிர்ந்து ஏற்றார் மதுகை மதம் தப
கார் எதிர்ந்து ஏற்ற கமஞ் சூல் எழிலி போல்
நீர் நிரந்து ஏற்ற நிலம் தாங்கு அழுவத்து
சூர் நிரந்து சுற்றிய மா தபுத்த வேலோய் நின்
சீர் நிரந்து ஏந்திய குன்றொடு நேர் நிரந்து 5
ஏறுமாறு ஏற்கும் இக்குன்று

தங்கள் படைவலிமையால்  கொண்டிருந்த அஸுரர்களின்  கர்வம் கெடும்படியாக  நிலத்தைச் சூழ்ந்த கடலில் புகுந்திருந்த சூரபத்மனாகிய மாமரத்தை  அழித்தவனே !  நீ விரும்பித் தங்குவதால்  இந்த திருப்பரங்குன்றம் உன்னைப்பெற்ற ஹிமாசலத்தைப்போலும், அதற்கு மேலும் புகழ் பெற்றது.


தண் தளிர் தருப் படுத்து எடுத்து உரைஇ
மங்குல் மழை முழங்கிய விறல் வரையால்
கண் பொருபு சுடர்ந்து அடர்ந்து இடந்து
இருள் போழும் கொடி மின்னால் 25
வெண் சுடர் வேல் வேள் விரை மயில் வேல் ஞாயிறு நின்
ஒண் சுடர் ஓடைக் களிறு ஏய்க்கும் 


ஒளி வீசும் வேற்படை தாங்கியவனே! விரைந்த மயிலின் மேல் வரும் சூர்யன் போன்றவனே! உன் அழகிய மலையில் மழை முகந்து வரும் கரியமேகங்களின் இடி முழக்கம் அவற்றின்  வளமையை உரைக்கின்றன. அங்கு எழும் மின்னல் கீற்றுக்கள் கரிய இருளைப் போக்குகின்றன. உன் மலை, பலவித ஒளிரும் ஆபரணங்கள் பூண்ட உன் யானை பிணிமுகம் போன்று காட்சியளிக்கிறது.



from: omeswara.blogspot..in

செவ்வேளும் காமவேளும்!

நின் குன்றத்து
எழுது எழில் அம்பலம் காமவேள் அம்பின்
தொழில் வீற்றிருந்த நகர்
ஆர் ததும்பும் அயில் அம்பு நிறை நாழி     30
சூர் ததும்பும் வரைய காவாற்
கார் ததும்பு நீர் ததும்புவன சுனை
ஏர் ததும்புவன பூ அணி செறிவு
போர் தோற்றுக் கட்டுண்டார் கை போல்வ கார் தோற்றும்
காந்தள்செறிந்த கவின் 35
கவின் முகை கட்டு அவிழ்ப்ப தும்பி கட்டு யாழின்
புரி நெகிழ்ப்பார் போன்றன கை


 அங்குள்ள சித்திரசாலையானது மன்மதனின்  இடம் போல் விளங்குகிறது. சோலைகளும் சுனைகளும்  மலர்களின் செறிவால்  அந்த காமவேளின் அம்பறாத் தூணியைப் போல்வன. கார் காலத்தில் தோன்றும் காந்தள் பூவின் குலைகள்  அவனிடம் போரில் தோற்று கட்டுண்டார் கைகளைப் போன்று தோன்றுகின்றன! தும்பியினால் கட்டவிழ்க்கப்படும் காந்தள் மொட்டுக்கள், யாழின் நரம்பைத் தளர்த்துவார் கை போன்று  காண்கின்றன.


குன்றின் சிறப்பு

அச்சிரக்கால் ஆர்த்து அணி மழை கோலின்றே
வச்சிரத்தான் வானவில்லு  

வில்லுச் சொரி பகழியின்மென் மலர் தாயின     40
வல்லுப் போர் வல்லாய் மலைமேல் மரம்
வட்டு உருட்டு வல்லாய் மலைய நெட்டுருட்டுச்
சீர் ததும்பும் அரவமுடன் சிறந்து
போர் ததும்பும் அரவம் போல்
கருவி ஆர்ப்ப கருவி நின்றன குன்றம்   45
அருவி ஆர்ப்ப முத்து அணிந்தன வரை
குருவி ஆர்ப்ப குரல் குவிந்தன தினை
எருவை கோப்ப எழில் அணி திருவில்
வானில் அணித்த வரி ஊதும் பல் மலரால்
கூனி வளைத்த சுனை  50


வலிய போரில் வல்லவனே!
முன்பனிக்காலத்தில் அக்குன்றில் தவழும் மேகங்கள் இந்த்ரனுடைய வில்லை வளைப்பது போல் தோன்றுகிறது. அங்குள்ள மரங்கள் பரப்பும் மெல்லிய மலர்கள் அவ்வில்லிலிருந்து கிளம்பும் பாணத்தைப் போன்றன!

அங்கு எழும் தாளங்களின்  ஒலியும், சிறந்த வாத்யங்களின் ஒலியும் மேகங்களின் முழக்கமும் போர் முழக்கத்தைப்  போன்றிருக்கின்றன!  அருவிகள் ஒலித்து விழுவது சிகரங்கள் முத்தாரம் அணிந்தது போலுள்ளது. விளையும் தினைக்கதிர்களைக்கண்டு குருவிகள் ஆரவாரம் செய்கின்றன. கரையிலிருந்து நீரில் சாயும் தட்டைகளில் பலவித மலர்கள் வீழ்ந்திருப்பதால் அவை இந்த்ரனது வில்லைப்போன்று விளங்குகின்றன.






மலைமுகட்டில் வானவில்!
By Adrian Michael (Own work)[GFDL (http://www.gnu.org/copyleft/fdl.html) CC BY-SA 3.0 creativecommons via Wikimedia commons.


வேண்டுகோள்!

புரி உறு நரம்பும் இயலும் புணர்ந்து
சுருதியும் பூவும் சுடரும் கூடி
எரி உருகு அகிலோடு ஆரமும் கமழும்
செரு வேற் தானைச் செல்வ நின் அடி உறை
உரிதினின் உறை பதிச் சேர்ந்தாங்கு
பிரியாது இருக்க எம் சுற்றமோடு உடனே 56




போரில் சிறந்த வேற்படை தாங்கிய செல்வனே! தானைத் தலைவனே! முறுக்கிய நரம்புடைய யாழின் இசையுடன்  பாட்டும், வேத கோஷமும், பூவும், தூப, தீபங்களுடன் கூடி உன் திருவடிக்கு வந்தனை புரிகின்றோம்!  நாங்கள் எங்கள் சுற்றத்தாருடன் கூடி இப்பரங்குன்றின் கீழ்,  உன்னைவிட்டு  நீங்காது,என்றும்  உறையும்படி அருள்புரிவாயாக!